ஆசிரயர் சேவையில் 34,000 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

ஆசிரயர் சேவையில் 34,000 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

நாடு முழுவதுமுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் தகவல்கள் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதால் அது நிறைவடைந்ததும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படமென்றும் கல்வி அமைச்சர் சபையில் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 8.000 ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு முன்னர் அந்த நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வருடத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்துள்ளன. மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படமென்றும் தெரிவித்தார்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம். பி தமது கேள்வியின் போது,

களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களுக்கான குறைபாடு நீண்ட காலமாக நிலவுகின்றது. அதனால் பெருமளவு மாணவர்கள் உயர்தரத்தில் கலைத் துறையையே தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நீண்ட கால பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image