‘ஜனநாயக முகமூடி அணிந்த, மக்கள் ஆதரவற்ற ஆட்சி நீக்கப்பட வேண்டும்!

‘ஜனநாயக முகமூடி அணிந்த, மக்கள் ஆதரவற்ற ஆட்சி நீக்கப்பட வேண்டும்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தமையானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தோழர் ஜோசப் ஸ்டாலின் சற்று சுசுகவீனமுற்ற நிலையில் கொழும்பு கோட்டை பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவு அல்லது பிடியாணை ஏதுமின்றி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையகமான "குருமெதுர" வில் வைத்து நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார் . 28.05.2022 அன்று கோல்பேஸ் மக்கள் போராட்டம் ஆரம்பமாகி 50ம் நாள் நிறைவு தினத்தன்று கலந்து கொண்ட கூட்டத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நாட்டைப் படுபாதாளத்தில் தள்ளிய ராஜபக்சக்களுக்கு கடமைப்பட்டுள்ள நண்பரான ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று மக்களின் விருப்புக்கு அப்பாலான முறையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஜனாதிபதியாக இருக்கிறார். மே 9 தொடக்கம் ஒவ்வொரு மாத 9 ஆம் தேதியிலும் போராட்டக்காரர்கள் ஒவ்வொரு சர்வாதிகாரிகளையும் தூக்கி எறிந்து இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ஓகஸ்ட் 9 தொடர்பான பீதி ‘ஜனாதிபதி’யின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. இதுவே போராட்டக்களத்தை வழி நடாத்தும் தலைவர்கள் மீதான தொடர் வேட்டை. இதன் தொடர்ச்சியாகவே தோழர் ஜோசப் ஸ்டாலினின் கைதும் இடம்பெற்றிருக்கிறது.

தோழர் ஜோசப் ஸ்டாலின் ஆசிரியர், அதிபர்களுக்கான போராட்டங்களில் மட்டுமின்றி ஒடுக்கப்படும் மக்களின் குரலாக எப்போதுமே முன் வரிசையில் நிற்பவர். காலிமுகத்திடல் போராட்டத்திலும் தொடர்ச்சியாக தனது ஆதரவை தயங்காது மக்களின் சார்பில் நின்று வழங்கி வந்தவர். போராட்டக்களத் தலைவர்களை கைது செய்வதன் மூலம் மக்களின் எழுச்சி குரலை நசுக்கி விடலாம் என்று அதிகாரம் கனவு காண்கிறது. வரலாற்றில் எங்கும் அவ்வாறு நிகழ்ந்ததில்லை. மக்கள் போராட்டங்கள் வெவ்வேறு வடிவங்களை மாற்றிக் கொண்டு முன் சென்று கொண்டே இருக்கும். தோழர். ஜோசப் ஸ்டாலினும், போராட்டக்காரர்களும் இந்த கைதுகளால் பின்வாங்கப் போவதில்லை என்பதை அதிகாரமும் அறியும்..


முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் – தோழர். ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களின் கைதினை வன்மையாக கண்டிக்கிறது. அவர்கள் அனைவரும் உடனடியாக நிபந்தனைகளின்றி விடுதலைசெய்யப்பட வேண்டும். ‘ஜனநாயக முகமூடி அணிந்த, மக்கள் ஆதரவற்ற எதேச்சாதிகார ஜனாதிபதி ரணில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்’ என்ற போராட்ட கோஷத்தோடு முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கமும் முஷ்டியை உயர்த்தி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் போராட்டத்திற்கு வெற்றி!

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image