உரிய தீர்வு இல்லையேல் கடுமையான நடவடிக்கை - இலங்கை தோட்ட அதிகாரிகள் சங்கம்

உரிய தீர்வு இல்லையேல் கடுமையான நடவடிக்கை - இலங்கை தோட்ட அதிகாரிகள் சங்கம்

தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம் என்று இலங்கை தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (01) நுவரெலியா ரதல்லையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி சங்கத்தின் ஊடக பேச்சாளர் ரவீந்திர சேனாரத்ன இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

தோட்ட முகாமையின் பிரதான நபர்களாக காணப்படும் தோட்ட முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் உட்பட தோட்ட அதிகாரிகள் என்றால் யார்? நாட்டின் பொருளாதாரத்துக்கு அவர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்கின்றனர்? என்பது தொடர்பிலும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இதற்கு முன்னர் நாம் பல தடவைகள் பலரின் கவனத்திற்கு எடுத்துரைத்திருந்தோடு தோட்ட அதிகாரிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

எனினும் எமது இந்த கோரிக்கைகள் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சரோ அரசோ உரியமுறையில் கவனம் செலுத்தவும் இல்லை எம்மோடு எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடாத்தவில்லை. எண்ணிக்கை அடிப்படையில் தோட்ட அதிகாரிகள் குறைவாக காணப்பட்டாலும் நாம் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இடத்தில் உள்ளோம். எனினும், நாம் பணிப் புறக்கணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் ஈடுப்படாது கௌரவமான முறையில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்நிலையில் எம்மீதான பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாம் தொடர்ந்தும் பொறுமைகாக்க முடியாது. எமது பிரச்சினைகள் தொடர்பில் செவிசாய்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பெருந்தோட்டத்துறை செயற்பாடுகளில் இருந்து தற்காலிகமாகவாவது விலக வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். தேயிலைக்கான பசளை இன்மை கிருமிநாசினி இன்மை போன்ற காரணங்களால் தேயிலை உற்பத்தியானது 40 வீதத்தால் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரூபா 1000 சம்பளமும் வழங்கப்பட வேண்டும் உற்பத்தி குறையுமானால் பெருந்தோட்டத்துறையை தொடர்ந்து முன்னெடுப்பது எவ்வாறு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேயிலைக்கு இரசாயண பசளையா, சேதன பசளையா என்பது பிரச்சினை அல்ல. எதுவானாலும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்கு விஞ்ஞான பூர்வமான சிறந்த முறைமையொன்றை வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்..

தற்போதைய நிலைமை தொடர்ந்தால் தொழிலாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு மட்டுமே தொழில் வழங்கக்கூடியதாக இருக்கும். எமது தேயிலை தொழிற்துறை பாதிக்கப்படுமானால் எமது தொழிலுடன் நேரடி மற்றும் மறைமுகமாக தொடர்புபட்டுள்ள சுமார் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் பாதிப்பை எதிர்நோக்குவர்.

எனவே தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் சந்தர்ப்பமொன்றை வழங்கவேண்டும். தோட்ட அதிகாரிகளும் தோட்ட தொழிலாளர்களும் நேரடியாக தொடர்புபட்டுள்ள இந்த தொழிற்துறையில் தற்போது முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. தோட்ட அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் எமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இல்லையேல் நாம் கடும் நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் சங்கத்தின் ஊடக பேச்சாளர் ரவீந்திர சேனாரத்ன எச்சரிக்கை விடுத்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image