இந்தோனேசிய விமான விபத்து! தேடும் பணிகள் தீவிரம்!

இந்தோனேசிய விமான விபத்து! தேடும் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து விமான ஊழியர்கள் 12 பேர் உட்பட 62 பேருடன் சென்ற போயிங் ரக பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் கடலுக்குள் பலத்த சத்தத்துடன் விழுந்ததாக மீனவர் ஒருவர் பிபிசிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 20 ஹெலிகொப்டர்கள், கப்பல்கள், படகுகள், 2,500 மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்கும் பணியும், இறந்தவர்கள் உடல்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.

விமானத்தின் பாகங்கள் சிலவும், கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் தானா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கிடையே மனித உடலின் பாகங்கள் மற்றும் உடைகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

விமானத்தில் உள்ள 2 கருப்பு பெட்டிகளில் விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விபத்து நடக்கும் போது எழுந்த சத்தம் உள்ளிட்டவைகள் பதிவாகி இருக்கும். எனவே, அதனை கண்டுபிடித்து விட்டால் விபத்துக்கான காரணம் தெரிந்து விடும் என்பதால், கருப்புப் பெட்டிகளை மீட்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், லாங்கங்-லகி தீவுகளுக்கு இடையே உள்ள கடல் பகுதியில் இருந்து கருப்புப் பெட்டியின் சிக்னல் வந்து கொண்டிருப்பதால், அந்த பகுதியில் கடலுக்கு அடியே 20 மீட்டர் ஆழத்தில் கருப்புப் பெட்டிகள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டிகளின் இடம் கண்டறியப்பட்டுள்ளதால் அதனை மீட்டெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம், கடலில் விமானம் பலமாக மோதியதில் அது இரண்டு துண்டுகளாக உடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களது உறவினர்களின் உதவியை கோரியுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image