சர்வதேச மனித உரிமைகள் தினம்!

சர்வதேச மனித உரிமைகள் தினம்!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.

'சமத்துவம் - சமத்துவமின்யைக் குறைக்கிறது. மனித உரிமைகளை முன்னேற்றுகிறது' (EQUALITY - Reducing inequalities, advancing human rights) என்பது இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளாகும்.

1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால், டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.

அனைவரும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்பதை இந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது.

இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தை இந்த நாள் உணர்த்துகின்றது.

1955 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொணடது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும்.

இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

இதேவேளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான 16 நாட்கள் உலகளாவிய பிரசாரம், சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றுடன் நிறைவடைகிறது.

வருடாந்தம் நவம்வர் மாதம் 25 ஆம் திகதி இந்தப் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, சர்வதேச ரீதியில், பெண் உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image