மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பணிப்பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பணிப்பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

மலேசியாவுக்கு தொழிலுக்காகச் சென்று அங்கு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் பேருவளையைச் சேர்ந்த 32 வயதான பெண்ணின் சடலம் நேற்று (16) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இப்பெண் மரணித்து சுமார் ஒன்றரை மாதத்தின் பின்னர் அவரது சடலம் இவ்வாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

சதுரிக்கா பிரியதர்ஷனி என்ற குறித்த பெண் கடந்த 2019.12.30 ஆம் திகதி தொழில் நிமித்தம் மலேசியா பயணமானார். அழகுசாதன நிலையத்தில் பணியாற்றுவதற்கு சென்ற குறித்த பெண்ணுக்கு, கொவிட் பரவல் நிலைமை காரணமாக இரண்டு மாதங்கள் மாத்திரமே பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.

பின்னர் அவர் தொழிலை இழந்ததால், மலேசியாவில் அறிமுகமான இலங்கையர் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் தனக்கு பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் தமது வீட்டுக்கு அறிவித்திருந்தார்.

இவ்வாறு, பணியாற்றிவந்தபோது, அவர் தனது வீட்டாருடன் அவ்வப்போது, தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். எனினும், 2021 ஆகஸ்ட் 30 க்கும் பின்னர் அவரிடமிருந்து எவ்வித அழைப்பும் கிடைத்திருக்கவில்லை என அவரது தாய் தெரிவித்துள்ளார்.

அதன்போது, அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பணி இடத்திலிருந்து அறிவிக்கப்பட்டதாகவும், எனினும், தமது மகளுக்கு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அப்பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.

அவரது சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image