பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,700 சம்பளம் நீதிமன்ற தலையீட்டால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரூ. 1,700 சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் ரூ. 5,000+ அரசாங்கம் வழங்க வேண்டுமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது குறித்து இ.தொ.காவின் தலைவரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பின்னடைவை சந்தித்து இருந்த போதிலும். ஏனைய சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட ரூ. 5000 கொடுப்பனவு, அரச அதிகாரிகளால் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

அவர்கள் வேலைக்கு செல்வதாகவும், அவர்களுக்கான ஊழியர் சேமலாபநிதி வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க முடியாது எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அப்போதைய பிரதமரின் இணைப்பு செயலாளராக இருந்த செந்தில் தொண்டமான், இப்பிரச்சினை குறித்து அப்போதைய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ரூ. 5,000 வழங்குவதற்கான நியாயமான அரச ஆவணங்களை பிரதமரிடம் சமர்ப்பித்து, இந்த நிவாரண தொகையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன் பல முறை கலந்துரையாடி, செந்தில் தொண்டமான் மலையகம் முழுவதும் குறித்த தொகையை இடைக்கால நிவாரணமாக பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ரூ. 1,700 சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000+ ரூபாய் வழங்க மாவட்டம் வாரியாக தொழிலாளர்களின் பட்டியல், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை, தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கை என அனைத்து ஆவணங்களையும் செந்தில் தொண்டமான் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய செந்தில் தொண்டமானின் கோரிக்கையை விரைவாக ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் ரூ. 1,700 சம்பளத்தை பெறுவதற்கு தற்போது உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மாற்றுவழிகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image