ஒன்றுகூடல் உரிமையை மீள உறுதிப்படுத்திய ஜனாதிபதி

ஒன்றுகூடல் உரிமையை மீள உறுதிப்படுத்திய ஜனாதிபதி

அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இராஜதந்திரிகளுடன் நேற்று முன்தினம்(22) இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த விடயம் தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி வௌிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி செயலகத்தை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவது தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21ஆவது சரத்தும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை பேணும் அரசியலமைப்பின் 14 (1) (ஆ) உறுப்புரையும் தற்போதைய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க கட்டடங்களை கைப்பற்றுவதற்கும் சொத்துக்களை பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதிக்கக் கூடாதென அமெரிக்க சிவில் சுதந்திர சங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களில் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படாமல் நகரில் அகிம்சை வழியில் போராட்டங்களை தொடர அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விஹாரமஹாதேவி பூங்காவில் திறந்தவௌி அரங்கு, புதிய நகர மண்டபம், ஹைட் பார்க் மற்றும் கெம்பல் பார்க் போன்ற கொழும்பிலுள்ள வசதிகள் அனைத்தும் வன்முறையற்ற போராட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GotaGoGama போராட்டத்தளம் தொடர்பில் சமூக ஊடக அறிக்கைகளில் வௌியாகும் தகவல்கள் பொய்யானவை எனவும் பாதுகாப்பு படையினரால் அகற்றப்படவில்லை எனவும் இராஜதந்திரிகளுக்கு இதன்போது தௌிவுபடுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image