வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியை தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பணியகம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியை தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பணியகம்

இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டு வேலைகள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால் விசேட விசாரணை பணியகத்தின் பிரிவு தனது விசாரணை நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள பணியகத்தின் பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக, ஹாலி-எல, இரத்தினபுரி, தங்காலை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய, மாகாண அலுவலகங்களிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

இதன்படி 2024 ஜனவரி முதல் ஜூன் 18 வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக 2155 முறைப்பாடுகள் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ளதுடன், அவற்றில் 1051 முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், 11 சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை சோதனையிட விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 65 மோசடி செய்பவர்களும் இந்த காலப்பகுதியில் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர்கள் 8 பேரும் உள்ளடங்குகின்றனர்.

2024 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் பணியகத்தால் பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு  பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் 65,103,626.00 ரூபாவை மீட்க முடிந்தது.

வெளிநாட்டு வேலையைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு முகவரகத்திற்கு சரியான உரிமம் உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட வேலையைப் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறியவும்.

வேலை தேடுபவர்கள் 1989 உடனடி அழைப்பு இலக்கத்தை அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெறுமாறு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 011 2864241 என்ற பணியகத்தின் விசேட புலனாய்வு திணைக்கள இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image