யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் - அமைச்சர் பந்துல

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் - அமைச்சர் பந்துல

யார் ஆட்சிக்கு வந்தாலும் IMF ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கைகளின்படி செயற்படப் போகிறார்களா இல்லையா என்பதை ஆட்சிக்கு வர எதிர்பார்க்கும் தரப்பினர் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை வழிநடத்தினாலும், அவர்கள் 2028 வரை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தங்களைப் பேண வேண்டும். அதன்படி, 2025 ஆம் ஆண்டளவில், வெளிநாட்டு வள இடைவெளி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு போதுமானதாக இருக்காது. கடந்த வருட அனுபவத்தின்படி அதற்கு 5018 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் எந்த அரசாங்கமும் இந்த நிதியை ஈடுசெய்ய வேண்டும். அதற்காக சர்வதேச நாணய நிதியம் 663 மில்லியன் டொலர்களை நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்க இணங்கியுள்ளது. அதன்போது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் உடன்பாடு தெரிவித்துள்ள உடன்படிக்கையின் பிரகாரம் ஆட்சிக்கு வர எதிர்பார்க்கும் தரப்பினர்கள் செயற்படுவார்களா? இல்லையா? என்பதை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும். அதன்படி, சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்க்காத எந்த ஒருவருக்கும் நாட்டின் எதிர்கால வரவு செலவுத் திட்டத்திற்கு வேறு மாற்றுவழி கிடையாது என்பதைக் கூற வேண்டும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image