கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் - வடிவேல் சுரேஷ்

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் - வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகள் எவ்வாறு தான்தோன்றித்தனமாகவும், தன்னிச்சையாகவும் செயற்படுகின்றன என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும்.

24ஆம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடும்போது தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படாவிட்டால் கம்பனிகளை துரத்தியடிப்பதற்கான போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் எவ்வித பேதமும் இன்றி ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

ராஜகிரியவில் உள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை ஏற்கனவே ஒரு வருடம் காலதாமதமடைந்துள்ளது. இந்த சம்பள விவகாரம் தொடர்ந்தும் திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 10ஆம் திகதி கூட்டப்பட்ட சம்பள நிர்ணய சபையை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்தமையானது, முழு மலையக மக்களையும் புறக்கணித்தமைக்கு சமமாகும்.

இவ்வாறு தன்னிச்சையாக செயற்படுவதற்கு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அதிகாரமளித்தது யார்? சம்பள விவகாரம் குறித்து எமது பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தொழில் அமைச்சின் அதிகாரம் மிக்க அதிகாரியான தொழில் ஆணையாளர் நாயகம் சம்பள நிர்ணய சபைக் கூட்டினார். தொழில் ஆணையாளரின் அறிவிப்பினை முதலாளிமார் சம்மேளனம் சட்ட ரீதியாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த அழைப்பும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்றால், எவரோ ஒருவர் முதலாளிமார் சம்மேளனத்துக்கு அதிகாரத்தை வழங்கியிருக்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களை கம்பனிகள் எந்தளவு கவனத்தில் கொள்கிறது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் தொழில் பிணக்குகளை பெருந்தோட்ட நிறுவனங்கள் எவ்வாறு கையாள்கின்றன என்பதும் இங்கு நிரூபனமாகிறது.

எனவே இவ்வாறு தான்தோன்றித்தனமாக செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

24ஆம் திகதி கூடவுள்ள சம்பள நிர்ணய சபையில் முதலாளிமார் சம்மேளனத்தின் நகர்வுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு, பேதங்களைத் துறந்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பெருந்தோட்ட கம்பனிகளை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 24ஆம் திகதி தீர்மானமொன்று எட்டப்படாவிட்டால் பதவிகளைத் துறந்து போராட வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம் என்றார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image