பெருந்தோட்ட மக்களுக்காக ”அதி சக்தி” எனும் கோதுமை மா அறிமுக நிகழ்வு

பெருந்தோட்ட மக்களுக்காக ”அதி சக்தி” எனும் கோதுமை மா அறிமுக நிகழ்வு

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் செரண்டிப் கோதுமை மா உற்பத்தி நிறுவனம் ஆகியன இரண்டும் இணைந்து சத்தூட்டப்பட்ட கோதுமை மா அறிமுக விழா நேற்று முன்தினம் (15.11.2023) நுவரெலியாவில் இடம்பெற்றது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவிற்கமைய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த கோதுமை மா பைபர் சத்து, இரும்பு சத்து, போலிக்கமிலம் மற்றும் விட்டமின் பீ12 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய விசேட கோதுமை மா ஆகும்.

இது சந்தையில் உள்ள சாதாரண கோதுமை மாவை விட விலை மலிவாக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக மாத்திரம் விற்கப்படும்.

பெரும்பான்மையான தொழிலாளர்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் இடையே போசனை குறைப்பாடும் விசேடமாக எனிமிக் எனும் நோயும் காணப்படுகின்றது. இதற்கு தீர்வு ஒன்று வழங்கும் முகமாகவே முதற்கட்டமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சர்மா, பெருந்தோட்ட யாக்கங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட அதன் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

பாரத் அருள்சாமி இதன்போது மேலும் தெரிவித்ததாவது,

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலுக்கமைவாக வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு மேலதிகமாக கொள்கை ரீதியான மாற்றங்கள் தர்சார்பு பொருளாதார அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார அபிவிருத்தி போன்றவற்றில் பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம் எமது தலைமையில் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு கட்டமாகவே இந்த அதி சக்தி கோதுமை மா அறிமுகமாகும். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற புரட்சிகரமான திட்டங்களை நாம் அறிமுகப்படுத்தவும் உள்ளோம்.

இக்குறுகிய காலத்தில் எம் மக்களின் போசனை மட்டத்தை கருத்திற் கொண்டு அதி சக்தி எனும் கோதுமை மாவை உற்பத்தி செய்த செரண்டிப் நிறுவனத்திற்கு எம்மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image