அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மாதாந்தம் செலவாகும் தொகை எவ்வளவு?

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மாதாந்தம் செலவாகும் தொகை எவ்வளவு?

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து வௌியிட்டுள்ளார்.

வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை என்ற தொனிப்பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (13) பாராளுமன்றத்தில் சமர்பித்தார். அதில் அவர் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் குறிப்பிடுகையில்,

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் தங்கள் நட்டத்தை ஈடுசெய்வதற்கு அரச வங்கிகளிலிருந்து கடன் வாங்குகின்றன. எனவே, அரச வங்கிகள் பலவீனமாக இருக்கும்போது, வங்கிகள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நிதியை வழங்குகிறது. அந்த நிதியை சம்பாதிக்க வேண்டுமாயின், மக்கள் மீது அதிக வரிச் சுமையை சுமத்த வேண்டியேற்படுகின்றது.

சில குழுக்கள் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று அரச ஊழியர்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் கடினமான காலம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு, நாம் நாளுக்கு நாள், படிப்படியாக முன்னேற வேண்டும். இது கடினமான பயணம். ஒருபுறம் வேலை நிறுத்தங்களால் முன்னேற்றம் தடைப்படுகிறது. மறுபுறம், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

சம்பள உயர்வு பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். நினைத்தவாறு சம்பள உயர்வை வழங்க முடியாது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசின் வரி வருவாயில் 35 சதவீதம் செலவிடப்படுகிறது. மேலும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால், அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும்.

அரச துறையினரின் சம்பளத்தை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் 93 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

1. அரச ஊழியர்களின் சம்பளம்
அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் பின்னர் சம்பள அதிகரிப்புக் கிடைக்கவில்லை. இதனால் அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் சமநிலை பாதிக்கப்படாத நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நான் முன்மொழிகின்றேன்.

தற்பொழுது அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 1.3 மில்லியன் (1,300,000) ஆகும். அவர்களது குடும்ப அங்கத்தவர்ளது மொத்த எண்ணிக்கை 5 மில்லியனுக்கு அதிகமாகும். இந்த அரச ஊழியர்களுக்கு தற்பொழுது கிடைப்பது ரூபா 7,800 மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாத்திரமாகும். நாம் 2024 ஜனவரி முதல் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவினை ரூபா 17,800 வரை அதிகரிப்போம்.

திறைசேரிக்கு குறித்த வருடத்திற்குரிய வருமானம் கிடைக்க ஆரம்பிப்பது பெப்ரவரி, மார்ச் மாதங்களின் போதாகும்.

எனவே, இக்கொடுப்பனவு அதிகரிப்பினை மாதாந்த சம்பளத்திற்கு சேர்த்துக்கொள்வது ஏப்ரல் மாதத்திலிருந்தாகும்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான நிலுவைத் தொகையினை ஒக்தோபர் மாதத்திலிருந்து தவணை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

2. ஓய்வூதியம்
அரச ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 730,000 ஆகும். அவர்களுக்கு தற்போது கிடைப்பது ரூபா 3,525 மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாகும். அரச ஓய்வூதியதாரர்களின் மாதாந்த வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவை ரூபா 6,025 வரை அதிகரிப்போம். இந்த அதிகரிப்பு 2024 ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்தப்படும். 2024 ஆண்டில் ரூபா 386 பில்லியன் ஓய்வூதியத்திற்காக செலவு செய்யப்படும்.

3. விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம்
விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகும். இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது.

ஊழியர்களிடமிருந்து இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூபா 38 பில்லியன் அறவிடப்படுகிறது. எனவே, அரசதுறை ஊழியர்களின் பங்களிப்பு, இதனை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை. எனவே இவ் ஓய்வூதியப் பங்களிப்பிற்காக அறவிடப்படும் சதவீதத்தை 2024 ஏப்ரல் முதல் அனைத்து சேவைப் பிரிவினருக்கும் 8 சதவீதமாக அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். இச்சரிசெய்தல் மூலம்; ஆண்டுதோறும் ரூபா 09 பில்லியனை மேலதிகமாக அறவிடுவதற்கு முடிவதுடன் இது விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image