அரசாங்க அதிகாரிகள் கேட்ட லஞ்சம் தொடர்பில் வௌியான தகவல்

அரசாங்க அதிகாரிகள் கேட்ட லஞ்சம் தொடர்பில் வௌியான தகவல்

அதி சொகுசு பஸ் ஒன்றை லஞ்சமாக அரசாங்க அதிகாரிகள் கேட்டதாக தகவல் வௌியிடப்பட்டுள்ளது.

கண்டி, ஹந்தானையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனை தெரிவித்தார்.தலைமையில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

““இன்று இந்த இடத்திற்கு வந்தபோது எனக்கு இன்னுமொரு பறவைகள் பூங்கா நினைவுக்கு வந்தது. ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இவ்வாறான பறவைகள் பூங்காவொன்று அமைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பறவைகள் தீவில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன பாராளுமன்றத்தை நிறுவியுள்ளார். இப்போது அன்றிருந்த பறவைகள் அங்கு இல்லாத போதும் வெவ்வேறு வகையான பறவைகள் உள்ளன. காகங்களும் உள்ளன.

இந்த பறவைகள் பூங்காவை நிர்மாணிப்பதில் சுமார் 20 வருடகாலங்கள் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்ததாக கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ கோட்டேகொட இந்த சர்வதேச பறவைகள் பூங்காவை இன்று நாட்டுக்கு சமர்ப்பித்துள்ளார். சிங்கப்பூரின் ஜூரோன் பறவைகள் பூங்காவை மாதிரியாகக் கொண்டு இந்த சர்வதேச பறவைகள் பூங்காவை உருவாக்கியதாக அவர் கூறினார். இதன் மூலம் கண்டி நகரின் சுற்றுலா மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஜூரோன் நகரம் முதலீட்டு வலயமாகத்தான் முன்னேற்றப்பட்டது. புதிய பொருளாதாரப் பயணத்துடன் இலங்கை முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னர், அவர்களது வர்த்தகங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு 10 வருடங்கள் செல்கிறது. இந்தநிலையை மாற்ற வேண்டும்.

புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் உற்பத்தி, ஏற்றுமதி பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஒரு முதலீட்டாளர் இலங்கைக்கு வந்து முதலீடு செய்ய 10 வருடங்கள் எடுத்துக் கொண்டால் அதன் மூலம் பொருளாதாரத்திற்கு நன்மை கிடைக்காது.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மூன்று மாத குறுகிய காலப்பகுதியில் பெரிய கொழும்பு பொருளாதார திட்டத்தை நிறைவேற்றி அதனை ஆரம்பித்து வைத்ததால், அதன் பொருளாதார நன்மை இலங்கைக்கு கிடைத்தது. ஜனாதிபதி பிரேமதாசவின் 200 ஆடைக் கைத்தொழில் வேலைத்திட்டம் மூன்று வாரங்களில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்காவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது. முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை என்பவற்றுக்குப் பதிலாக, பொருளாதார ஆணைக்குழுவை நியமித்து, ஒரே நிறுவனத்தால் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் முறையை கொண்டு வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, எதிர்காலத்தில் அதை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

மேலும், நமது நாட்டின் சுற்றுலாத் துறைக்கு மதிப்பை வழங்கி, இந்த பறவைகள் பூங்காவை நாட்டிற்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த பறவைகள் பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா சபையின் தலைவர் நிஷாந்த கோட்டேகொட இங்கு உரையாற்றுகையில்,

“இதில் வெளிநாட்டை பூர்வீகமாக கொண்ட பறவைகள், புலம்பெயர்ந்த பறவைகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த பூங்காவில் காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து, விடுவிப்பதற்கான ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பறவைகளை இனப்பெருக்கம் செய்து ஏற்றுமதி செய்யும் பிரிவும் இங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையம் மற்றும் இயற்கை பறவைகள் ஆய்வு கூடம் என்பனவும் உள்ளன.

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு இதன் முதல் கட்டத்தை நிறைவு செய்ய முடிந்துள்ளது. இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கொழும்பிற்கும் கண்டிக்கும் இடையில் இயங்கக்கூடிய அதி சொகுசு பஸ் ஒன்றை லஞ்சமாக அரசாங்க அதிகாரிகள் கேட்டனர். அதனை வழங்க முடியாததால், பல ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டத்தை நிறுத்த நேரிட்டது. எப்படியோ தற்பொழுது இதன் முதல்கட்டத்தை திறக்க முடிந்துள்ளது.” என்று தெரிவித்தார்.

ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த 27 ஏக்கர் பரப்பிலான, சர்வதேச பறவை பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வலயம், நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.

490 மில்லியன் ரூபா செலவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இப்பறவை பூங்காவில் வெளிநாட்டுப் பறவைகள் பெரிய கூடுகளில் பராமரிக்கப்படுவதோ, அவற்றைப் பராமரிப்பதற்கு சுமார் நூறு பணியாளர்களும் உள்ளனர்.

40 வருடகால “இலங்கையை பூர்வீகமாகக் கொண்டிராத பறவைகள் பற்றிய ஆய்வின்” அடிப்படையில் இந்த பூங்கா நிறுவப்பட்டுள்ளது. பல வெளிநாட்டுப் பறவைகள் இலங்கையில் இனப்பெருக்கம் செய்ய முடிந்திருப்பது விசேட அம்சமாகும். முதற்கட்டமாக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புலம்பெயர்ந்த பறவைகளைப் பார்ப்பதற்கான வசதிகள், விலங்கியல் மாணவர்களுக்கான கல்விப் பயிற்சி மையம், பறவைகள் சரணாலயம், பறவைகள் இல்லம் மற்றும் தனிமைப்படுத்தல் பிரிவு என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளன

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image