பிறப்புச் சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் - புதிய நடைமுறை

பிறப்புச் சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் - புதிய நடைமுறை

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் உள்ளடக்கிய பிறப்பு சான்றிதழை வழங்கும் செயற்பாடுகளை ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர் திணைக்களம் என்பன இணைந்து ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2021 டிசம்பர் 14 ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து இலங்கை பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பதிவாளர் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்கிய பிறப்பு சான்றிதழை வழங்கும் செயற்பாடுகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவை இணையவழியூடாக மேற்குறிப்பிடப்பட்ட இரு திணைக்களங்களுக்கிடையிலும் தகவல்கள் பரிமாற்றப்பட்டு வழங்கப்படவுள்ளன. ஆரம்பகட்டமாக இதன் முன்னோடி வேலைத்திட்டத்தை கம்பஹா, தெஹிவளை, ஹங்குராங்கெத்த, குருணாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிறப்பு சான்றிதழைப் பெற்றுக் கொண்ட சகல பிரஜைகளும் 15 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே தேசிய அடையாள அட்டை எண்ணைப் பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டு தமக்காக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த முறைமையில் தனிநபர் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் போது பிறப்பு முதல் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஒரே அடையாள இலக்கத்தை உபயோகிக்க முடியும். அத்தோடு கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் சமூக தகவல்களை மிக சுலபமாக சேகரித்து வைப்பதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும்.

இவ்வாறு தனிநபர் அடையாளம் ஒரே இலக்கத்தில் உறுதிப்படுத்தப்படுவதால் எந்தவொரு திணைக்களத்திலும் பொது மக்களுக்கு மிகவும் இலகுவாக சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image