சுமார் 20,000 பெண்கள் மீது துன்புறுத்தல், வன்முறைகள்

சுமார் 20,000 பெண்கள் மீது துன்புறுத்தல், வன்முறைகள்

2023 ஆம் ஆண்டில் இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்கள், வன்முறைக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின், குடும்ப சுகாதாரப் பிரிவின் வைத்தியர் நெதாஞ்சலி மாபிடிகம தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) தீர்ப்பதற்கான பல்துறை தேசிய செயற்திட்டத்தை முன்வைத்து அதன் உள்ளடக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வு கடந்த 08 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

இந்த செயலமர்வு பாராளுமன்ற பெண் பிரதிநிதிகளின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே எம்.பி மற்றும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துகோரள ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. வீட்டில் பெண்களுக்கு எதிராக இடமபெரும் வன்முறைகளை தடுத்தல் மற்றும் பணியிடத்தில் பெண்கள் முகம்கொடுக்கும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு இந்தத் திட்டம் ஊடாக பிரயோகரீதியாக செயற்பட வேண்டுமென இதன்போது கருத்துத் தெரிவித்த துறைசார் மேற்பார்வைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின், குடும்ப சுகாதாரப் பிரிவின் வைத்தியர் நெதாஞ்சலி மாபிடிகம இங்கு குறிப்பிடுகையில், நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் கர்ப்ப காலத்தில் வன்முறைக்கு முகம்கொடுப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்த ஆண்டில் தற்பொழுது பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைக்கு உள்ளாகிய பெண்களின் எண்ணிக்கை 20,000 க்கும் அதிகம் என புள்ளிவிபரங்களை முன்வைத்து அவர் மேலும் தெரிவித்தார். மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் முன்முயற்சியில் 18 துறைகளை மையப்படுத்தி, 13 அமைச்சுக்களின் விடயப்பரப்புடன் சம்பந்தப்பட்ட வகையில் இந்தப் பல்துறை தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image