13,000 உள்ளூராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை - பிரதமர்

13,000 உள்ளூராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை - பிரதமர்

உள்ளூராட்சி சபை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) வாய்மூல விடைக்கான  கேள்விநேரத்தின் போது தயாசிறி ஜயசேகர எம்.பி. எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர எம்.பி. தமது கேள்வியின் போது, கடந்த எட்டு வருடங்களாக மேற்படி சிற்றூழியர்கள் 13,000 பேர் கடமை புரிந்து வருவதாகவும் உள்ளூராட்சி சபைகள் மூலம் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டாலும் அவர்களுக்கான நிரந்தர நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுக்க எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்றார்.

அதற்கு பதிலளித்த பிரதமர்,

இதற்கு முன்னரும் அது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு பதில் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை நிரந்தரமாக்குவதற்கு திரைசேறியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கான கொடுப்பனவை வழங்கக்கூடிய சில உள்ளூராட்சி சபைகள் இருந்த போதும் அத்தகைய சுமையை சுமக்க முடியாத சில உள்ளூராட்சி சபைகளும் காணப்படுகின்றன.

அந்த வகையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திரைசேறியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image