1,700 ரூபாய் சம்பளத்தை வழங்க 09 நிறுவனங்கள் இணக்கம்- அமைச்சர் ஜீவன்

1,700 ரூபாய் சம்பளத்தை வழங்க 09 நிறுவனங்கள் இணக்கம்- அமைச்சர் ஜீவன்

தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

புதன்கிழமை (10)) பகல் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. செவ்வாய்க்கிழமை (09) நான் இந்த சபையில், ஆர்ப்பாட்டங்களின் பின்னர் 1700 ரூபா சம்பளம் வழங்க 7 நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகக் கூறியிருந்தேன். இன்று 9 நிறுவனங்கள் 1700 ரூபா சம்பளம் வழங்க தமது இணக்கத்தைத் தெரிவித்துள்ளார்கள் என்பதை இந்த சபையில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். வெகுவிரைவில் சிறந்த தீர்வு வரும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

நான் சபையில் இல்லாத நேரம் என் மீது சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என் மீது ''1700 ரூபாவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த பின்னர் நான் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தில் இருக்கும் துரைமார்கள் அனைவரையும் என் வீட்டுக்கு அழைத்து நான் பேசியதாக குற்றம்சாட்டியிருந்தார்.இது முழுமையான பொய் .

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தில் இருக்கும் துரைமார்களையும் கூப்பிட்டேன்.ஹற்றன்,தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தில் இருக்கும் துரைமார்களையும் நான் கூப்பிட்டேன். ஏன் கூப்பிட்டேன் என்றால் நாம் தான் மக்களுடன் வேலை செய்து கொண்டிருக்கின்றோம். நாம் முகநூலில் அறிக்கை விடுபவர்கள் அல்ல. நான் ஒளிவு மறைவாகப் பேசுபவன் அல்ல. நான் ஜீவன் தொண்டமான். நான் போய் துரைமாரை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் தான் என்னை வந்து பார்க்க வேண்டும்.

சில முகாமையாளர்கள் எப்படி மக்களை துன்புறுத்துகின்றார்கள் என சபையில் குறிப்பிட்டுள்ளேன். அதுக்கு இங்கு அந்த பாராளுமன்ற உறுப்பினர். புசல்லாவையில் ஒரு இளைஞர் இறந்த போது அங்குள்ள பொலிஸை நாம் மாற்றியதாக சொல்லியுள்ளார். பொலிஸ் அரச கட்டுப்பாட்டில் உள்ள நபர் .முகாமையாளர் தனியார் நிறுவனத்திற்குள் வரும் நபர். நான் எம்.பி.யாக இருக்கும்போதும் தட்டிக் கேட்டேன்,இராஜாங்க அமைச்சராக இருக்கும் போதும் தட்டிக் கேட்டேன். அமைச்சரவை அமைச்சராக இருக்கும் போதும் தட்டிக் கேட்டேன். முகநூலில் வாய் சொல் வீரராக இருக்கும் நபர் நானல்ல. அதனால்தான் மக்கள் ஆதரவும் இளைஞர்கள் ஆதரவில் இ.தொ.கா பக்கம் உள்ளது

இந்த சம்பள பிரச்சினை முடிக்கவே நாம் விரும்புகின்றோம். அரசியல் செய்ய விரும்பும் கீழ்த்தரமான சிந்தனை எம்மிடம் கிடையாது. தமது பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் பேசவே மக்கள் எமக்கு வாக்களித்து அனுப்பியுள்ளார்கள். என்னை விமர்சிக்கும் இவர்கள் போன்றவர்கள் முடிந்தால் நேருக்கு நேர் வந்து என்னுடன் பேசட்டும். சபையின் பாதுகாப்புக்குப் பின்னால் இருந்து ஏன் பேசுகின்றார்.நான் மீண்டும் கூறுகின்றேன் இந்த பிரச்சினையைத் தீர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image