தனிநபர் வருமான வரி கட்டமைப்பை திருத்த அமைச்சரவை அனுமதி

தனிநபர் வருமான வரி கட்டமைப்பை திருத்த அமைச்சரவை அனுமதி

வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஏப்ரல் மாதம் முதல் தனிநபர் வருமான வரி (PIT) கட்டமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

 

2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிச் சீர்திருத்தங்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அதேவேளையில், நிதிப் பொறுப்பைப் பேணுவதே இந்த வரி கட்டமைப்பு மாற்றங்களின் நோக்கமாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடலைத் தொடர்ந்து, தனிநபர் வருமான வரிக் கட்டமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், அமைச்சரவைப் பத்திரம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே வரி அறிவிடுவது கையாளப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் (EFF) வேலைத் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்தத் தேசிய உற்பத்தியில் 2.3% ஆன முதன்மை வரவு செலவுத் திட்ட மேலதிகத்தை அடைவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு 2025 ஆம் ஆண்டளவில் அரச வருமானத்தை மொத்தத் தேசிய உற்பத்தியில் 14% ஆக உயர்த்த கணிசமான வரி வருவானம் தேவைப்படும்.

அடிப்படை சீர்திருத்தங்களில் ஆண்டுக்கு தலா 1.2 மில்லியன் ரூபா வரி இல்லாத வரம்பு, தலா ரூ. 500,000 வரி இடைவெளி மற்றும் வரி விகிதம் குறைந்தபட்சம் 6% ஆகவும் அதிகபட்சம் 36% ஆகவும் இருக்கும். எவ்வாறாயினும், குறிப்பாக நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கை தனது நிதி இலக்குகளை அடையத் தொடங்கிய 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் முடிவு செய்தது.

அதன்படி, வரி அளவை 500,000 ரூபாயில் இருந்து 720,000 ரூபாவாக உயர்த்தவும், வரி இல்லாத வரம்பை 1.2 மில்லியனாக வைத்திருக்கவும், அதிகபட்ச வரி விகிதம் 36% உட்பட அனைத்து மட்டங்களிலும் விளிம்பு வரி விகிதங்களைப் பராமரிக்கவும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருமானச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ததைத் தொடர்ந்து, 2025 ஏப்ரல் மாதம் முதல் புதிய வரி அமுலாக்கம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதிக வரிச்சுமையைக் கொண்ட வரி வரம்புகளுக்கு மத்தியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த வரிச் சீர்திருத்தத்தின் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மாதத்திற்கு ரூ.150,000 வருமானம் பெறும் ஒரு நபரின் வரியில் 14% குறைப்பைப் பெறுவார், அதே சமயம் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இன்னும் வரையறுக்கப்பட்ட நிவாரணம் கிடைக்கும்.

இந்த சீர்செய்தலின் ஊடாக இந்நாட்டின் மொத்த வருமானத்தில் ஏற்படும் தாக்கம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 0.07% என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கருத்திற் கொண்டு இந்த நிவாரணம் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த உத்தேச திருத்தங்கள் நிதி ஒழுக்கத்தை பேணுவதற்கான தேவையையும் குறிப்பாக நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான மக்களின் கோரிக்கையையும் நிறைவேற்றும் என நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image