மலையக மக்கள் உயிர் வாழ்வதற்கான வாழ்வாதார உரிமையை பெற்றுக் கொடுப்போம் - சஜித்

மலையக மக்கள் உயிர் வாழ்வதற்கான வாழ்வாதார உரிமையை பெற்றுக் கொடுப்போம் - சஜித்

வரலாற்றில் தொழிலாளர்களாகவே அடையாளப்படுத்தப்படும் மலையக பெருந்தோட்ட மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவர். அதற்கான புரட்சியை எமது ஆட்சியின் முதல் நாளில் இருந்தே ஆரம்பிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

'200இல் மலையகம்' மாற்றத்தை நோக்கி மாபெரும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மலையக மக்களின் 200 ஆண்டு சிறப்புமிக்க வரலாற்றையும் பரிசுத்தமான பாரம்பரியத்தையும் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி தலைமையில் கொண்டாடும் இந்த நிகழ்வுக்கு எனது பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

உண்மையில் கூறப்போனால் மிகவும் துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியை தேடி தந்து பலம் சேர்க்கும் மலையக மக்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்கள் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பில் அவ்வாறு கூறப்பட்டாலும், தற்போது வரையிலும் யதார்த்தத்தில் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பலமும் இன்னமும் கிடைக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

மலையக மக்களுக்கான பிரஜாவுரிமையை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவே வழங்கினார். அதேபோன்று  எமது ஆட்சியில் மலையக மக்கள் உயிர் வாழ்வதற்கான  வாழ்வாதார உரிமையை நாம் பெற்றுக் கொடுப்போம்.

மலையக மக்கள் தொழிலாளர்களாகவே அடையாளப்படுத்துகின்றனர்.  மலையக மக்கள் தொழிலாளர்களாகவே இருக்காமல், தேயிலை தொழிற்துறையின் தொழில் முயற்சியாண்மை உடையவர்களாக மாற வேண்டும். மலையக மக்களை தமக்கான சொந்த காணி உரிமையைக் கொண்ட, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான புரட்சியை எமது ஆட்சியின் முதல் நாளில் இருந்தே ஆரம்பிப்போம்.

தினமும் லயன் அறையில் வாழ்க்கையை நடத்திகொண்டும், குறைந்தளவிலான கல்வி மற்றும் சுகாதார வசதிகளை கொண்டும் மிகவும் துயர வாழ்க்கையை மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கு நாம் முன்வந்துள்ளோம். பேசியதும், அறிவித்தல் விடுத்ததும் போதும். செயல்வடிவமே தற்போது அவசியமாகும். பேசியவை பொது வெளியில் உண்மையாக வேண்டும்.

எமது ஆட்சியின் முதலாவது காலப்பகுதியில் காணி உரித்துடைய, பொருளாதார பலம் கொண்ட, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை பெற்ற, அனைத்திலும் இயலுமையை கொண்ட, கௌரவமான வாழ்க்கையை மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான பயணத்தை ரணசிங்க பிரேமதாசவின் பெயரில் நாம் ஆரம்பித்து செய்துகாட்டுவோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறவிரும்புகிறேன்.

வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் மலையக தோட்ட தொழிலாளர்களின் 200 வருட சிறப்புமிக்க வரலாற்றை கொண்டாடும் இவ்வேளையில், எமது ஆட்சி வருவதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மலையக மக்களுக்காக மூச்சு மற்றும் பிரபஞ்சம் திட்டங்களின் ஊடாக பாடசாலைகளை கட்டியெழுப்பி, சுகாதார துறையின் பிரச்சினை தீர்த்து  மலையக மக்களின் உரிமைகளை பலப்படுத்துவோம் என்றார். 

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image