பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டம் தொடர்பில் ஐ.நா பிரதிநிதிக்கு விளக்கம்

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டம் தொடர்பில் ஐ.நா பிரதிநிதிக்கு விளக்கம்

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்துள்ளார்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-André Franche இற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07.12.2023) நடைபெற்றது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சமகால நிலைவரம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்தார்.

அத்துடன், மலையகத்துக்கான வீட்டுத் திட்டம், மலையக சமூக மேம்பாடு என்பன பற்றியும் இருவருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றது. மலையக கல்வி மேம்பாடு பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பெண்களுக்கான உரிமைகள், பெண்களின் சுகாதார பாதுகாப்பு, சிறார் மற்றும் மகளீருக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான ஏற்பாடுகள், சிறுவர் தொழிலாளிகள் உருவாக்கப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

ஐ.நாவின் நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் சுத்தமான குடிநீரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்காக அமைச்சு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி ஜீவன் தொண்டமான் எடுத்துரைத்தார். இதற்காக ஐநாவில் இருந்து கிடைக்க வேண்டிய உதவித் திட்டங்கள் பற்றியும் கோரிக்கை விடுத்தார்.

பொது தனியார் கூட்டாண்மை மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி, ஸ்மாட் தொழில்நுட்பம் என்பவற்றை நீர்வழங்கல் துறைக்கு பயன்படுத்தி அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஊடக செயலாளர்

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image