இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடுதிரும்ப வேண்டும்

இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடுதிரும்ப வேண்டும்

சிறிமா  -  சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன்,  சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள அமைச்சர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

" இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக பலவந்தமாக நாடு  கடத்தப்பட்டனர். இவ்வாறு சென்றவர்களில் ஒரு தரப்புக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது கவலையளிக்கின்றது. இதனால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. கடும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது மக்களுக்கு இலங்கையில் குடியுரிமையை பெற்றுக்கொடுத்தோம்.

  

இந்த வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். எமது மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கான நல்லிணக்க பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர்ச்சஸ் காணி உரிமையும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவை போதுமானவை அல்ல.  பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ள மக்கள் இலங்கை திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று தவறு சீர்செய்யப்பட வேண்டும். அதற்காக தமக்குள்ள பொறுப்புகளை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இது விடயம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணைந்து பணியாற்ற நான் தயாராகவே இருக்கின்றேன்." - என்றார்.

ஊடக செயலாளர்

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image