தொழிலுக்காக வௌிநாடு செல்ல காத்திருக்கும் தாய்மார்களுக்கான விசேட அறிவித்தல்!

தொழிலுக்காக வௌிநாடு செல்ல காத்திருக்கும் தாய்மார்களுக்கான விசேட அறிவித்தல்!

இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான பெண்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவை பெற்றுக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என்றும் அந்த பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கிறது.

05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது குடும்பப் பின்னணி அறிக்கையை வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்திற்கு ஜூன் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி, புதிய திருத்தங்களின் பிரகாரம், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிப்பதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

மேலும், 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்விக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கிராம அலுவலர் அல்லது பிரதேச செயலர் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை பெற்றுக்கொள்ளும் போது தாய்மார்கள், தங்களுக்கு பிள்ளைகள் இருக்கின்றனர் அல்லது இல்லை என்பதையும் அல்லது இரண்டு வயதுக்கு மேற்பட்ட, 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மார்கள், அந்த பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் சத்தியக்கடதாசி வழங்க வேண்டும். அந்த சத்தியக்கடதாசியானது, தமது பிரிவுக்கான கிராம உத்தியோகத்தர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image