ரூபா 1000 சம்பளம் - மனு மீதான விசாரணை மே 31 வரை ஒத்தி வைப்பு

ரூபா 1000 சம்பளம் - மனு மீதான விசாரணை மே 31 வரை ஒத்தி வைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூபா 1000 சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து, பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையளர் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொராயா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 31.05.2021 ஆம் திகதி வரை விசாரணையை ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் ​நேற்று (05) உத்தரவிட்டது

இடைமனுதாரர்களாக விடயங்களை முன்வைக்க அனுமதிக்குமாறு தனியார் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.
எனினும், பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா அதற்கு ஆட்சேபனை தெரிவித்தமையால், தனியார் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

20 பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, தேயிலை மற்றும் இறப்பர் தொழில் துறை தொடர்பான சம்பள நிர்ணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமது சேவை பெருநர்களால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிறுவனங்களை நடத்திச்செல்வதாகவும், அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைய தொழிலாளர்களுக்கு ரூபா 1000 சம்பளம் வழங்கினால் பெருந்தோட்டங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீண்டகால தரவுகளை சமர்ப்பித்து மன்றுக்கு அறிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image